டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பௌலிங் தேர்வு செய்தார். திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஸ்வின், சிவம் சிங் ஓப்பனர்களாக இறங்கினர். பவர்பிளேவில் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. சாய் கிஷோர் வீசிய ஐந்தாவது ஓவரில், சர்ச்சைக்குரிய வகையில் அஸ்வின் எல்.பி.டபுள்யூ ஆகி சென்றார்.
பவர்பிளே முடிவில் திண்டுக்கல் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. இந்த சீஸனில் தற்போதுவரை பவர்பிளேவில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோர் இதுதான். ஹை ஸ்கோரிங் மேட்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருப்பூர் அணி பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து போட்டியை தங்கள் பக்கம் கொண்டு சென்றனர்.
இதனால் திண்டுக்கல் அணி 93 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஹை ஸ்கோரிங் போட்டி என்பது மாறி, திண்டுக்கல் இந்த சீஸனில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. எளிதில் எட்டிக் கூடிய ஸ்கோருடன் திருப்பூர் அணி களத்தில் இறங்கியது. திண்டுக்கல் அணி அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, பெரியசாமி என்று அனுபவம் வாய்ந்த பௌலிங் யூனிட்டை கொண்டுள்ளது. சற்றே வாய்ப்பு கிடைத்தாலும் போட்டியை தங்கள் பக்கம் இழுத்து விடுவார்கள்.
திருப்பூர் அணிக்கு ஆரம்பத்தில் சில பவுண்டரிகள் வந்தாலும், ஓப்பனர் அமித் சாத்விக் 13 ரன்களில் பெரியசாமி வீசிய பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்கள் சென்றால் போட்டி சற்று கடுமையாக மாற வாய்ப்புள்ளது என்பதால், மற்றொரு ஓப்பனரான துஷார் ரஹேஜா நிலைத்து நின்றார்.
சிறிய ஸ்கோர் என்பதால் அவர் மிகவும் பொறுமையாக ஆடிக் கொண்டிருந்தார். பவர்பிளே முடிவில் திருப்பூர் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. துஷார் 19 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார். அஸ்வின் வீசிய ஏழாவது ஓவரில் துஷார் பீஸ்ட் மோடில் ஆடத் தொடங்கினார். அந்த ஓவரில் மட்டும் அவர் 3 சிக்ஸர்களை விளாசினார். வருண் சக்ரவர்த்தி வீசிய எட்டாவது ஓவரில் 2 ஃ போர், ஒரு சிக்ஸ் விளாசி அரை சதம் எடுத்தார்.
முதல் 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அடுத்த 20 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். துஷார் 6 ஃபோர்கள், 5 சிக்ஸர்களுடன் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் திருப்பூர் அணிக்கு இந்த சீஸனின் முதல் வெற்றியை பதிவு செய்ய உதவினார்.
யார் இந்த துஷார்?இதற்கு முன்பு சேப்பாக் அணிக்கு எதிராக திருப்பூர் தோல்வியடைந்த போட்டியிலும், துஷார் தான் அதிக ரன்கள் (79) எடுத்திருந்தார். டிஎன்பிஎல் கடந்த 2024 சீஸனில் 324 ரன்களுடன், அதிக ரன் எடுத்தோருக்கான ஆரஞ்ச் கேப் பட்டியலில் துஷார் 2வது இடத்தில் இருந்தார். இந்த சீஸனில் 5 போட்டிகள் முடிவில் அதிக ரன்களுடன் (144) எடுத்து ஆரஞ்ச் கேப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
அவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து டிஎன்பிஎல்லில் ‘ராக்கெட் ரஹாஜே’ என்றழைப்பார்கள். இடது கை பேட்ஸ்மெனான அவர், விக்கெட் கீப்பராகவும் உள்ளார். திண்டுக்கல் அணியின் ஜெயந்த் என்ற பேட்ஸ்மெனை அருமையாக ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கியிருந்தார்.
24 வயதான துஷார் ரஹாஜே ஹரியானாவை பூர்விகமாக கொண்டவர். பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். லிஸ்ட் ஏ, டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார். டிஎன்பிஎல்லில் இதற்கு முன்பு மதுரை பாந்தர்ஸ் அணியில் இருந்தார். தற்போது திருப்பூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.
இதேபோல தமிழ்நாட்டுக்காக ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே போட்டிகளிலும் தடம் பதித்து வருகிறார். முக்கியமாக ஸ்பின் பௌலிங்குக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது ரஹாஜேவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...