பெகுசராய் மாவட்டத்தில் உள்ள தில்ரத் கிராமத்தைச் சேர்ந்த ராக்கி குமாரி என்ற பெண், பல்லியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்பிகி கிராமத்தைச் சேர்ந்த ரவீஷ் குமார் என்பவரை காதலித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருந்தார்.
இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், ராக்கி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்லவேண்டும் எனக் கூறியபோது, கணவர் அனுமதி மறுத்ததாகவும், அதனால் மனவேதனையில் அவர் விஷம் குடித்ததாகவும் ரவீஷ் கூறியுள்ளார்.
உடல்நிலை மோசமடைந்த ராக்கி குமாரியை, ரவீஷ் அருகிலுள்ள பல்லியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர், தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டு ரவீஷும், அவரது தாயும் தனது மகளை கொலை செய்ததாக ராக்கியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இரு குடும்பங்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் இருதரப்பினரையும் கட்டுப்படுத்தி, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.