கேரளாவில் வசித்து வரும் இருவர் சேர்ந்து சென்னை சவுகார்பேட்டையில் இருந்து தங்கத்தை கட்டியாகவும், நகைகளாகவும் வாங்கி உள்ளனர். வாங்கி கொண்டு சென்னையிலிருந்து கேரளாவிற்கு புறப்பட்டு சென்ற நிலையில் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரியை பயன்படுத்தி திடீரென காரை வழிமறித்தனர்.
இதனையடுத்து காருக்குல் புகுந்து காரில் இருந்த இரண்டு பேரையும் மிரட்டி 1.25 கிலோ கிராம் தங்கக்கட்டிகள் , 2 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ. 60000 ரொக்க பணத்தையும் பறித்துச்சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் மர்ம கொள்ளை கும்பல் பாதிக்கப்பட்டவர்களை சென்னையில் இருந்தே பின்தொடர்ந்து வந்ததாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. 5 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக காரை மறித்து தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றது. இச்சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.