``பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்'' - ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!
Vikatan June 17, 2025 12:48 PM

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரானுடனான அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஈரானுடன் எல்லையைப் பகிர்கிறது. மாகாண அதிகாரிகள் அனைத்து எல்லைகளும் மூடப்படுவதை உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் விரிவடைந்து ஏற்படுத்தும் அச்சத்தினால், பாகிஸ்தான் தங்கள் பிராந்திய மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மற்றொரு பின்னணியும் உள்ளது.

கடந்த வார இறுதியில் ஈரானில் இருந்து வந்த யாத்ரீகர்கள் 450 பேரை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது. மாணவர்களையும் வெளிறுவதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. எல்லைப் பகுதியில் பயணிகள் மட்டுமல்லாமல் எரிபொருள் போக்குவரத்தையும் துண்டித்துள்ளனர்.

IRAN SUPEREME LEADER KHAMENEI

பலுசிஸ்தான் மக்கள் விழிப்புணர்வுடன் அரசின் ஆலோசனைகள் படி செயல்பட வேண்டுமென்றும், அனாவசியமாக எல்லை கடந்து பயணிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும் பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியிருக்கிறது.

ஈரான் மற்றும் ஈராக் செல்பவர்கள் பயணத்தை மறுபரீசிலனை செய்யுமாறு வலியுறுத்துவதற்காகவும், அங்கிருந்து திரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு உதவுவதற்காகவும் வெளியுறவு சார்பில் இஸ்லாமாபாத்தில் 24*7 நெருக்கடி மேலாண்மை பிரிவை (CMU) உருவாக்கியிருக்கின்றனர்.

இஸ்ரேல் - ஈரான் மோதல்

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கியதிலிருந்தே ஈரான் - இஸ்ரேல் உரசல் தொடங்கியது. சில மோதல்களும் வெடித்தன.

சமீபமாக கடந்த ஜுன் 13ம் தேதி இஸ்ரேல் ஈரானின் அணு சக்தி மற்றும் ராணுவ தளங்களைத் தாக்கியது. இதன்பிறகு இரு நாடுகளும் ஏவுகணைத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போருக்கான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்றுவரும் மோதலில் 224 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில் பெருமளவு பொதுமக்களும் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 390 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்பைத் உடைத்துவிட்டதாகவும், தங்கள் விமானங்கள் தெஹ்ரான் வானில் சுதந்திரமாக செயல்பட முடிவதாகவும் கூறியிருக்கிறது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் ஈரானுக்கு உதவுமா?

ஈரானின் உயர்நிலை ராணுவ அதிகாரியான ஜெனரல் மொஹ்சென் ரெசா, "இஸ்ரேல் ஆணு ஆயுதங்களைக் கொண்டு ஈரனில் தாக்குதல் நடத்தினால், இஸ்லாமாபாத் அணு ஆயுத தாக்குதல் நடத்தும்." என சமீபத்தில் பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவாக நிற்கும் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

General Mohsen Rezaei

ஆனால் ஈரானின் இந்த கூற்றுகளை மறுத்துள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்.

"பாகிஸ்தானின் அணுசக்தி திறன் அதன் மக்களின் நலனுக்காகவும், எதிரிநாடுகளின் சதிதிட்டங்களில் இருந்து நாட்டைக் காக்கவுமே உள்ளது. இந்த நாள்களில் இஸ்ரேல் செயல்படுவதைப் போல அண்டை நாடுகளின் மீது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக அவற்றைப் (அனு ஆயுதங்களை) பயன்படுத்தும் கொள்கையை நாங்கள் கொண்டிருக்கவில்லை." என அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ஒரே நாடான இஸ்ரேல், அணு ஆயுதங்களை அண்டை நாடுகளை அச்சுறுத்தவே வைத்திருப்பதாகவும், பாகிஸ்தான் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதாகவும் வேறுபடுத்திக் கூறியுள்ளார் ஆசிப்.

மேலும் அவர் இஸ்ரேலின் அணு ஆயுத சக்தி, NPT, NSG, CTBT உள்ளிட்ட எந்தவித அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் கட்டுப்படாததைக் குறிப்பிட்டு, "உலகம் இஸ்ரேலின் அணுசக்தி குறித்து எச்சரிக்கையாகவும் அச்சத்துடனும் இருக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.

Pakistani Defence Minister Khawaja Muhammad Asif

இஸ்லாமியர் பெரும்பான்மை நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரே நாடாக திகழும் பாகிஸ்தான், சக இஸ்லாமிய நாடுகளுக்காக அதனைப் பயன்படுத்தக் கூடும் என்பது அரசியல் ஆர்வலர்களின் நீண்டகால கருத்தாக இருக்கிறது.

ஆனால் ஈரான் கூற்றை பாகிஸ்தான் அமைச்சர் நேரடியாக மறுத்திருப்பதும், ஈரானுடன் எல்லைகளை மூடியிருப்பதும் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கை தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் காட்டுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.