`ரஷ்யாவுக்காக களமிறங்கிய வடகொரிய வீரர்கள் 6000 பேர் பலி' - பிரிட்டிஷ் உளவுத்துறை கூறுவது என்ன?
Vikatan June 17, 2025 04:48 PM

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட வட கொரிய ராணுவ வீரர்கள் 6000 பேர் உயிரிழந்ததாக இங்கிலாந்து பாதுகாப்பு உளவுத்துறை தகவல் அளித்திருக்கிறது.

இந்த எண்ணிக்கை ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் சண்டையிட்ட 11,000 வட கொரிய வீரர்களில் பாதிக்கும் மேலாகும்.

10 லட்சம் ரஷ்ய வீரர்கள் பலி

இதுகுறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK) படைகள் ரஷ்ய பிராந்தியமான குர்க்ஸ் பகுதியில் உக்ரைன் ராணுவத்துடன் நடந்த தீவிரமான சண்டையில் 6000த்துக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளனர். குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 11,000 வட கொரியா துருப்புக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர்.

Ukraine Forces in Kursk

இதைத் தொடர்ந்து வடகொரியா கூடுதலாக குறைந்த எண்ணிக்கையிலான துருப்புகளை குர்ஸ்க் பிராந்தியத்துக்கு அனுப்பியதாக ஓப்பன் சோர்ஸ் அறிக்கைகள் கூறுகின்றன.

"உக்ரைன் பெரிய அளவில் நடத்திய ஆபத்தான தாக்குதல்களிலே பெரும்பாலான வடகொரிய வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்." எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், "ஜூன் 04, 2025 அன்று, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான செர்ஜி ஷோய்கு, வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பிற்காக DPRK சென்றதாகக் கூறப்படுகிறது, இது மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகும்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பிற்கு வட கொரியா அளித்த ஆதரவுக்கு ஷோய்கு ஒரு முக்கிய கருவியாக இருந்திருக்கலாம்" என்றும் கூறுகிறது.

kim - putin

அத்துடன், "வடகொரிய படைகள் குர்ஸ்க் பகுதியைத் தவிர வேறெந்த பிராந்தியத்திலும் நிறுத்தப்படவில்லை. சர்வதேச இறையாண்மை கொண்ட உக்ரைனின் எல்லைக்குள் வடகொரிய படைகள் நிறுத்தப்பட வேண்டுமென்றால், ரஷ்யா மற்றும் வடகொரியா தலைவர்கள் இணைந்து ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா - ரஷ்யா பிணைப்பு!

கடந்த பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ரஷ்யா 10 லட்சத்துக்கும் மேலான வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைனின் தரவுகள் கூறுகின்றன.

இந்த வார தொடக்கத்தில் கிம் ஜாங்-உன் மாஸ்கோவுக்கு அளித்த செய்தியில், எந்த சூழலிலும் வடகொரியா ரஷ்யாவுடன் துணை நிற்கும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

ரஷ்ய தின கொண்டாட்டத்தில், கிம் ஜாங்-உன்னை 'அன்பான தோழர்' என அழைத்தார் புதின். "தோழர்களுக்கு இடையேயான உண்மையான உறவு," என்று தங்கள் நட்பை பரைசாற்றினார்.

"வடகொரியா-ரஷ்யா உறவை தொடர்ந்து முன்னெடுப்பது DPRK அரசு மற்றும் என்னுடைய சொந்த விருப்பமுமாகும்" என கிம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.