நாட்டில் வங்கி சேவை, சிம் கார்டு, பான் அட்டை, ரேஷன் கார்டு, அரசு நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலையால், பெரும்பாலானோர் ஆதார் அட்டை நகல்களை கைகளிலேயே எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஆதார் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்காமல், க்யூ.ஆர்., கோடு வாயிலாக ஆவணங்களை சரிபார்க்கும் செயலியை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஆதார் அட்டைகளை வழங்கும் 'உதாய்' எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய முடிவை எடுத்துள்ளது.
இதற்காக மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் புதிய செயலியை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த செயலியால், ஆதார் அட்டையின் நகலை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனலில், க்யூ.ஆர்., கோடு முறையை பயன்படுத்தி, செயலி வாயிலாக ஆதார் அட்டையை சரிபார்க்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனாலோ, பாதியாக மறைக்கப்பட்ட ஆதார் அட்டையை மின்னணு முறையில் பகிர முடியும் என்றும், ஆதாரின் 12 இலக்க எண்களுக்கு பதிலாக, அந்த அட்டையில் எட்டு எண்கள் மறைக்கப்பட்டு, கடைசி நான்கு எண்கள் மட்டுமே பகிரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய முறை வாயிலாக, 'பயோமெட்ரிக்' எனப்படும் கைவிரல் ரேகை, கருவிழி படலம் சரிபார்க்கும் பணியை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் ஆதார் மையத்தை பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட மாற்றங்களை இனி வீட்டிலிருந்தே செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குறித்த புதிய நடவடிக்கை மூலம் காகிதப்பணிகளை குறைத்தல், போலி ஆவணங்களின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் குடிமக்களுக்கு செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலி குறித்து உதாய் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது: ''கைரேகை, கருவிழிப்படலம் மாற்றத்தை தவிர அனைத்து விபரங்களையும் மாற்றுவதற்கு ஏதுவாக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ஆணையத்திடம் உள்ள 01 லட்சம் இயந்திரங்களில், 2,000 இயந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், ''தங்கும் விடுதிகள், ரயில் டிக்கெட் பரிசோதனை, சொத்து ஒப்பந்தம் போன்ற நடைமுறைகளில், கியூ.ஆர்., கோடு வாயிலாக ஆதார் அட்டை சரிபார்க்கப்படும் எனவும், இதனால், பல மோசடிகள் தடுக்கப்படும். என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய செயலி மற்றும் கியூ.ஆர்., கோடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.