லோன் தருவதாக சொன்னதால் தி.மு.க.வினர் அழைப்பை ஏற்றுச் சென்றோம்; ஆனால், தி.மு.க.வில் இணைவது போல் நடிக்க சொன்னார்கள்!" இப்படி ஒரு பரபரப்பான பேட்டியைத் தந்திருக்கிறார்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், விஜய் கட்சியை சேர்ந்த சிலர் தி.மு.க.வில் இணைவதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண், பெண் நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்றதாக கூறப்படும் விஜய் கட்சி பெண்களை ஊடகங்களை சந்தித்து பேசியபோதுதான் உண்மையான தகவல் வெளிவந்துள்ளது.
அந்தப் பெண்கள், "நாங்கள் ஏற்கனவே வாங்கிய லோன் பற்றி பேசத்தான் எங்களை அழைத்தார்கள். லோன் காலம் முடிவடையப் போவதால், புதிய லோன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் அங்கு சென்றோம். ஆனால், திடீரென்று ஒருவர் எங்களிடம், 'தி.மு.க.வில் இணைவது போல் போஸ் கொடுங்கள்' என்று வற்புறுத்தினார். அது அவர்களுடைய இடம் என்பதால், வேறு வழியின்றி நாங்கள் சொல்வதை கேட்டு நடித்தோம்" என்று தெரிவித்தனர்.
மேலும், "எங்கள் விசுவாசம் எப்போதும் விஜய் அண்ணாவுக்குத்தான். தி.மு.க.வினர் எங்களை ஏமாற்றி, தங்கள் கட்சியில் இணைவது போன்றதொரு நிகழ்ச்சியை நடத்திவிட்டார்கள்" என்று அந்த பெண்கள் வெளிப்படையாக பேசியிருப்பது, அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Edited by Mahendran