"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்று ஔவையார் சொன்ன நிலையில், "முருகன் இருக்கும் மலை எல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது" என புதுவை அமைச்சர் நமச்சிவாயம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் முருகன் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். "முருக பக்தர் மாநாடு அரசியல் சார்பற்றது என்றும், உள்நோக்கம் இல்லாதது என்றும், முருகன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கலந்துகொள்ள இருக்கும் மாநாடு என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருக்கும் முருகன் மாநாட்டுக்கு வருகை தரும்படி அழைப்பிதழ் கொடுத்துள்ளோம்" என்றும், "முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அழைப்பிதழ் கொடுக்க இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஔவையார் பாடினார். அதுபோல, மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தமானது. முருகன் இருக்கும் இடமெல்லாம் இந்துக்களுக்கு சொந்தமானது" என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.
தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் நாங்களும் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறோம் என்றும், இதில் எந்த விதமான அரசியல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran