நீலகிரியில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்து வருவதால், சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்றும், எனவே சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் இருளில் தவித்ததாகவும் கூறப்படுகிறது. மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் கம்பிகள் முறிந்து விழுந்ததாகவும், இதனால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் மின்சாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva