மதுரையில் வரும் ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி தொடங்கப்பட்டது, இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்பு புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருக பக்தர்கள் மாநாடு அரசியல் சார்பற்றது. உள்நோக்கம் இல்லாதது, ஆன்மிகத்தின் மீதும், முருகன் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் கலந்து கொள்கிற மாநாடு.
அமித் ஷா, ஒரு ஆன்மிக அன்பராகத்தான் மாநாட்டை சிறப்பாக நடத்துமாறு மக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளார். அவரை இந்த விவகாரத்தில் பாஜக தலைவராக பார்ப்பது அபத்தமானது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, சீமான், நடிகர் ரஜினிகாந்த் என எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கூட அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டிருக்கிறோம். இன்னும் நேரம் ஒதுக்கவில்லை" என்றவரிடம்,
"திருப்பரங்குன்றம் மலை விவகாரம்தான் இந்த மாநாட்டின் நோக்கமா?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஔவையார் பாடியுள்ளார். மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தமானது. முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.
தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது. இதில் எந்த பிளவுவாத நோக்கமும் கிடையாது" என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...