யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான நேர விரயத்தை தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் குறைத்துள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வந்தது. இதன் பலனாக சாலையோர சிறு, குறு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பெட்டிக்கடைகள் தொடங்கி பெட்ரோல் பங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், ஆன்லைன் டெலிவரி சேவைகள், கல்விக்கட்டணம் செலுத்துவது, பணப்பரிமாற்றம் என அனைத்துமே டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக மாறிவிட்டன. இதனால் கையில் சில்லறை இல்லை, ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் எனபது போன்ற பிர்ச்சனைகள் இருப்பதில்லை.
கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை 25 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகம் மக்களை ஈர்த்து வரும் நிலையில், இனி யுபிஐ பரிவர்த்தனைகள் மேலும் வேகமாக இருக்கும் என தேசிய பணப் பரிவத்தனைக் கழகம் தெரிவித்துள்ளது.
அதாவது இதுவரை கூகுள் பே, ஃபோன்பே போன்ற யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைக்கான நேரம் 30 வினாடிகளில் இருந்துவந்தது. தற்போது அது 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பணம் கழிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும் 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக் குறைக்கப்பட்டுள்ளது.