இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த ஜெனரலும், இரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான மொஹ்சின் ரெசாயின் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களால் இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் என இந்த காணொளியில் அவர் சொல்கிறார்.
மொஹ்சின் இந்த விஷயங்களை இரானின் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக சில ஊடக செய்திகளில் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்துள்ளது, ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து பொதுவெளியில் பேசவில்லை.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், ஜெனரல் மொஹ்சின் பேசிய காணொளிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூன் 16) பதிலளித்தார்.
"இது முற்றிலும் பொறுப்பற்ற தவறான செய்தி. அல்லாஹ் பாகிஸ்தானை ஒரு அணு ஆயுத சக்தியாக்கியுள்ளார், அதனால் உலகில் பல நாடுகளுக்கு பிரச்னையாக உள்ளது," என இஷாக் தார் தெரிவித்தார்.
"ஆனால் இந்த சக்தி நமது சொந்த பாதுகாப்புக்கும், நிலைத்தன்மைக்குமானது. உலகை உலுக்கிய 9/11 தாக்குதலுக்கு பிறகு இரண்டு படைகளும் நேருக்கு நேர் நின்றன, இந்தியாவுக்கு தேவை ஒரு வாய்ப்பு தான். நமக்கு இந்த சக்தி இல்லையென்றால், அந்த நேரத்தில் என்னவாகியிருக்கும் என யாருக்குத் தெரியும்? நாம் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என நமது தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்." என்றார்.
ஜூன் 14-ஆம் தேதி, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய நாடாளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான இஸ்லாமிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
"நாங்கள் இரானுடன் நிற்கிறோம், அனைத்து சர்வதேச மன்றங்களிலும் இரானின் நலன்களைப் பாதுகாக்க ஆதரவளிப்போம். இரான், ஏமன் மற்றும் பாலத்தீனத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. முஸ்லிம் நாடுகள் ஒன்றிணையாவிட்டால், நாம் அனைவரும் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அனைத்து முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அவசர அமர்வு ஒன்றைக் கூட்டி, ஒரு கூட்டு உத்தியை உருவாக்க வேண்டும்," என கவாஜா ஆசிப் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் தலைவர்கள் இரானுக்கு ஆதரவாகப் பேசினாலும், பாகிஸ்தான் இரானுடனான எல்லையை மூடிவிட்டதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது.
"சாகி, வாஷுக், பஞ்ச்குர், கெச் மற்றும் குவாடர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது," என பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண மூத்த அதிகாரியான காதிர் பக்ஷ் பிர்கானி, ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் சர்வதேச மன்றங்களில் இரானுக்கு ஆதரவாகப் பேசினாலும், ராணுவ உதவி வழங்கும் முடிவு அவ்வளவு எளிதானதாக இருக்காது.
சௌதி அரேபியாவுடன் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக நெருக்கம் உள்ள போதிலும் 2015-ஆம் ஆண்டு, சௌதி அரேபியா கோரிக்கை விடுத்தும் ஏமனுக்கு தனது படைகளை அனுப்ப பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இஸ்ரேல், அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளியாக இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு எதிராகச் செல்ல விரும்பாது.
பாகிஸ்தானும் இரானும் அண்டை நாடுகளாக உள்ளன, இரு நாடுகளுக்கிடையே 750 கிலோமீட்டர் நீள எல்லை அமைந்துள்ளது. பாகிஸ்தான் சுன்னி பெரும்பான்மை இஸ்லாமிய நாடாகவும், இரான் ஷியா பெரும்பான்மை நாடாகவும் உள்ளன.
அண்டை நாடுகளாக இருந்தபோதிலும், இவ்விரு நாடுகளுக்கிடையே உறவு சுமுகமாக இருந்ததில்லை. இரு நாடுகளும் எல்லையில் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
உண்மையில் சொல்லப் போனால், பாகிஸ்தான் வரலாற்று ரீதியாக சௌதி அரேபியாவின் கூட்டாளியாக இருந்து வந்துள்ளது. சௌதி அரேபியாவும் இரானும் நீண்ட காலமாகப் பகைவர்களாக உள்ளன.
"1979-இல் இரானில் இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்த பிறகு, பாகிஸ்தானுடனான உறவுகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டன. இந்தப் புரட்சிக்குப் பிறகு, இரானின் ஆட்சி ஷியா மையமாக மாறியது. அதாவது, பாரம்பரிய ஷியா நடைமுறைகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றன. இதனால், இஸ்லாம் இரு நாடுகளுக்கிடையே பிரிவினையை உருவாக்கும் காரணியாக மாறியது," என சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனம் (International Institute for Strategic Studies) தனது ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடுகிறது.
"1971-இல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்த பின்னர், 1977-இல் ஜெனரல் ஜியா-உல்-ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தானின் தேசிய அடையாளத்தில் இஸ்லாம் மேலும் முக்கியத்துவம் பெற்றது. காலப்போக்கில், இஸ்லாத்தின் சுன்னி பிரிவு அடையாளம் பாகிஸ்தானில் மையப்பொருளாக மாறியது. மறுபுறம், இரானில் ஷியா அடையாளமே முக்கியத்துவம் பெற்றது. இரான் இந்த அடையாளத்திற்கு உள்நாட்டில் அதிக முக்கியத்துவம் அளித்ததுடன், வெளிநாடுகளில் உள்ள ஷியாக்களின் பாதுகாப்பு குறித்தும் தீவிரமாகச் செயல்பட்டது. அதேவேளையில், 1979-க்குப் பிறகு இரான் அமெரிக்காவிடமிருந்து விலகி, பாகிஸ்தானுடனான நெருக்கத்தை அதிகரித்தது."
1979ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானைத் தாக்கியிருந்தது. பாகிஸ்தானில் சுன்னி முஸ்லிம் அடையாளம் வலுவடைந்ததால், சௌதி அரேபியாவுடனான அதன் நெருக்கம் மேலும் அதிகரித்தது.
சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனத்தின் (International Institute for Strategic Studies) கூற்றுப்படி, இதைத் தொடர்ந்து சௌதி அரேபியா, பாகிஸ்தானில் மதரஸாக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் வஹாபி இஸ்லாiம ஊக்குவிக்கத் தொடங்கியது.
பாகிஸ்தான் ராணுவம் சௌதி அரேபியாவின் பாதுகாப்பில் பங்கெடுத்துள்ளது, இதற்கு ஈடாக சௌதி அரேபியாவிடமிருந்து பாகிஸ்தான் நிதி உதவியைப் பெற்று வருகிறது.
முஸ்லிம் நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதங்கள் கொண்ட நாடாகும். அணு ஆயுத சோதனைக்குப் பிறகு பாகிஸ்தான் மீது தடைகள் விதிக்கப்பட்ட போது, சௌதி அரேபியா நிதி உதவி வழங்கியது.
எனினும், கடந்த பத்தாண்டுகளில் சௌதி அரேபியாவுடனான பாகிஸ்தானின் நெருக்கம் சற்று தளர்ந்துள்ளது. மறுபுறம், 2015-இல் ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் இணையுமாறு சௌதி அரேபியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது.
1980-களில், அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் குழுக்களை பாகிஸ்தான் மூலம் ஆதரிக்கத் தொடங்கின. இந்தக் குழுக்களில் இருந்தே ஆப்கான் தாலிபனும் அல்-கொய்தாவும் உருவாகின.
"இதற்கு பதிலளிக்கும் விதமாக, இராக்குடனான போரில் ஷியா ஆப்கானியர்களை இரான் சேர்க்கத் தொடங்கியது. ஆப்கானிஸ்தானில் இரானின் மூலோபாய நலன்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது இரான் மீதான பாகிஸ்தானின் அவநம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது," என சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனம் (IISS) தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரியில், இரானும் பாகிஸ்தானும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை நடத்தின. எல்லை தாண்டிய பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பதாக இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை தொடங்க 2020ஆம் ஆண்டில் முடிவு செய்தன.
எகிப்து 1979ஆம் ஆண்டிலும், ஜோர்டான் 1994ஆம் ஆண்டிலும் இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ உறவை தொடங்கின.
இஸ்ரேலுடன் சர்ச்சையோ, சண்டையோ இல்லை என்றாலும் இஸ்ரேலை ஒரு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. அரபு நாடுகளுடன் இஸ்லாமிய ஒற்றுமையை காட்டுவதற்காக பாகிஸ்தான் இவ்விதம் செய்கிறது.
ஆனால் அரபு நாடுகளே இஸ்ரேலுடன் நெருக்கமாகும் போது, இஸ்ரேலுடன் உறவுகளை ஸ்தாபிக்க பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை இருக்கிறது?
இதற்கான விடையை 2020-ல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொடுத்தார்.
"மற்ற நாடுகள் என்ன செய்தாலும் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. பாலத்தீனர்கள் தங்களுடைய உரிமைகளை பெறும் வரையில் நம்மால் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள முடியாது என முகமது அலி ஜின்னா 1948ஆம் ஆண்டு கூறியிருந்தார்," என இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரித்தால், அமெரிக்காவுடனான அதன் உறவு சிறப்பாக இருக்கும் என பலர் சொல்கின்றனர். ஆனால் பாகிஸ்தானில் சாமனிய மக்களின் இஸ்ரேல் எதிர்ப்பு எண்ணம் தெருக்களில் போராட்ட வடிவில் அடிக்கடி வெளிப்படுகிறது.
இஸ்ரேலும், பாலத்தீனமும் ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டினால், இஸ்ரேலுடன் ராஜீய உறவை ஏற்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியிருந்தார்.
2005ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரியும், இஸ்ரேலின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சில்வன் ஷலோமும் இஸ்தான்புல்லில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு எர்துவானால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பாகிஸ்தானில் ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது.
"எங்களது பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானுடனான எங்களுடைய உறவுக்கு மட்டுமல்ல, மொத்த இஸ்லாமிய உலகத்துக்கே முக்கியமானது. அரபு உலகத்தை சேர்ந்த அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் பாகிஸ்தானுடனும் ராஜீய உறவுகள் வேண்டும்," என சில்வன் ஷலோம் கூறினார்.
பாகிஸ்தானில் இஸ்ரேல் ஒரு விரோதியாக பார்க்கப்பட்டாலும், இஸ்ரேலில் இதைப் போன்ற கோபம் காணப்படவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2018ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது, "இஸ்ரேல் பாகிஸ்தானின் எதிரி அல்ல, பாகிஸ்தானும் எங்கள் எதிரியாக இருக்கக் கூடாது," என நெதன்யாகு கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் விவகாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென பாகிஸ்தானில் மெல்லிய குரல்கள் எழுந்தன. எனினும், அப்போதைய பாகிஸ்தான் செனட் தலைவரான ராஸா ரப்பானி, "இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உருவாகி வரும் கூட்டணி முஸ்லிம் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" என்று முஸ்லிம் நாடுகளை எச்சரித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு