திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன குளிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் செல்லம்மாள்(65) மற்றும் அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரிக்கு 28 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காளீஸ்வரி கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். பவித்ராவும் திருமணமாகி 2 பெண் குழந்தைகளுடன் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பிரிந்தனர்.
இதனால் லித்திக்ஸா (7), தீப்தி (5) ஆகிய தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா, கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் தாய் காளீஸ்வரியின் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று ஜூன் 17ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு பவித்ரா அந்த நபருடன் சென்று விட்டார்.
இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாளும், தாய் காளீஸ்வரியும் பேத்திகளான 2 சிறுமிகளையும் கொன்றுவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.