ஈரான் - இஸ்ரேல் இடையே போர் காரணமாக இரு நாடுகளும் மாறி மாறி குண்டு மழை பொழிகிறது. குறித்த போருக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது.
முதற்கட்டமாக, ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் ஆர்மீனியாவிற்குள் நுழைந்து வடக்கு ஈரானில் இருந்து 110 மாணவர்களை இந்தியா வெளியேற்றியுள்ளது.
வெளியேற்றப்பட்ட இவர்கள் ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் ஆர்மீனிய தலைநகர் யெரெவனுக்கு சாலை வழியாக பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆர்மீனிய தலைநகரை அடைந்த பிறகு, ஜூன் 18 (இன்று) பிற்பகல் 02:45 மணிக்கு மாணவர்கள் சிறப்பு விமானத்தில் யெரெவனில் இருந்து புறப்பட்டனர்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்துவின் ஆரம்ப கட்டங்களின் ஒன்றாக ஜூன் 19 அதிகாலையில் மாணவர்கள் டெல்லிக்கு வந்து சேருவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஈரானில் உள்ள இந்திய நாட்டினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.