பெட்ரோல் பங்குகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அல்ல என்பதையும், அவை தனியார் வசதிகளாகவே கருதப்படவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தும் முக்கிய தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பொது வசதிகளாக அறிவிக்க முயன்றதற்கு எதிராக, பல்வேறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு ஒன்று வழக்கு தாக்கல் செய்தது.
அதில், “இந்த கழிப்பறைகள் பெட்ரோல் பங்குக்குள் வாடிக்கையாளர்களுக்காக அமைக்கப்பட்ட தனியார் வசதிகள். அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. பொதுமக்களுக்கு அதை திறந்து விடுவது நடைமுறையில் சாத்தியமற்றது” என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.எஸ். டயஸ், இடைக்கால உத்தரவில், “பங்க் உரிமையாளர்களின் கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டு, அதற்காக அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று மாநில அரசுக்கும், திருவனந்தபுரம் மாநகராட்சிக்கும் தெளிவாக உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான முழுமையான விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக அமையும் நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிப்பறைகள் பற்றிய தேவையை சீராக முன்னெடுக்க அரசு மற்றொரு வழியை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.