தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ்குமார், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த குஷால் பிஷ்வாஷ், அலி காதர் ஷேக் ஆகியோர் கோவையில் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்கள் ஊருக்குச் சென்ற நிலையில், ரயில் மூலம் நேற்று கோவை திரும்பியுள்ளனர். அவர்களுடன் மேலும் சில புலம்பெயர் தொழிலாளிகள் இருந்துள்ளனர்.
கோவை ரயில் நிலையத்திலிருந்து பணி இடத்துக்குச் செல்வதற்காக, அங்கிருந்த வாடகை ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆனால், புலம்பெயர் தொழிலாளிகளின் பணி இடத்துக்கு ஆட்டோ ஓட்டுநர் செல்லாமல் ஆவாரம்பாளையம் ரயில்வே பாலத்தின் கீழ் சென்று நிறுத்தியிருக்கிறார்.
அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முகமது அசாருதீன், நௌபல் பாஷா, செந்தில்குமார் புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டியுள்ளனர்.
“எங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ10,000 வேண்டும்” என்று மிரட்டியவர்கள் கூகுள் பே மூலம் ரூ.13,000 பணத்தை அபகரித்து அவர்களை விட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த புலம்பெயர் தொழிலாளிகள் பதறியடித்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக தங்களின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர்கள் செந்தில்குமார், முகமது அசாருதீன், நௌபல் பாஷா மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதேபோல கோவைக்கு வரும் தமிழ் தெரியாத புலம்பெயர் தொழிலாளிகளைக் குறிவைத்து ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாகக் கூறி பிறகு மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் இந்தக் குற்றச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 3 ஆட்டோக்களையும் காலவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...