கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? CM ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - பாஜக நயினார்!
Seithipunal Tamil June 20, 2025 12:48 AM

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோவையில் 'அரபுக் கல்லூரி' என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 

கடந்த 2022-ஆம் ஆண்டு கோவை அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புத் தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என திமுக அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால் கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. 

தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்போது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.