பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்! Dhinasari Tamil %name%
”மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்” என தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிரை ‘ஓசி’ என்று தி.மு.க.,வைச் சார்ந்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பஸ்களில் கட்டணமின்றி பயணிப்போரை ‘ஓசி’ என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் ‘ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க’ என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், தி.மு.க., மூத்த அமைச்சர் துரை முருகன் ‘அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000’ என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை ‘ஓசி’ என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!
ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பஸ்களை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க., தலைவர்கள் காட்டாதது ஏன்?
அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும். – என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது…
பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்! News First Appeared in Dhinasari Tamil