யூடியூபர்கள் செய்தியாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடிகை யாஷிகா ஆனந்த் செய்தியாளர் சந்திப்பை பாதியில் ரத்து செய்து காரில் ஏறி சென்றார்.
நடிகர் ஆர்யா தயாரிப்பில், இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி ஜி5 ஓடிடியில் வெளியானது. இதற்கான புரமோஷனல் நிகழ்ச்சி சென்னை கத்திப்பாராவில் உள்ள அர்பன் ஸ்கொயரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நடிகை யாஷிகா ஆனந்த் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்து பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதற்கிடையில் யூடியூபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்தப் பகுதியில் முன் அனுமதி இல்லாமல் ஏன் நிகழ்ச்சி நடத்திகிறீர்கள் எனக் கேட்ட காவல்துறையினர், செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தினர். இதனையடுத்து நடிகை யாஷிகா ஆனந்த் காரில் புறப்பட்டு அவசர அவசரமாக சென்றார்.