பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகையாகும். எனவே இந்த வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,500 வீதம் நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழிமுறை என கருதுகிறேன்.
அதோடு, மேலே குறிப்பிட்ட தனியார் வாகனங்களுக்கு 3,000 ரூபாய் ஆண்டுக்கு கட்டணம் என்பதனை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கான நிதி சுமை குறையும் என்பதனை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாமக எம்எல்ஏக்கள் அருள், ஜி.கே. மணி ஆகியோருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் மருத்துவமனையில் இரு எம்எல்ஏக்களையும் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்எல்ஏக்களை சந்தித்தேன். அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்றார்.
அப்போது அன்புமணி மேடையில் கேட்ட மன்னிப்பை நேரில் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு போக போக தெரியும் என பாடலை பாடி அந்த பிரஸ் மீட்டை ராமதாஸ் கலகலப்பாக்கினார்.
மேலும் அன்புமணி மாவட்டங்கள் தோறும் கூட்டம் நடத்துகிறாரே என்ற கேள்விக்கு அவர் வேலையை அவர் பார்க்கிறார் என்றார்.