தமிழகத்தில் கோவை தெலுங்குபாளையத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் ஜூன் 15ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை மூட தயாராகி கொண்டு இருந்தார். அப்போது அவருடைய கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். அவர்கள் சக்திவேலிடம், தம்பதிகளான நாங்கள் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருந்தோம்.
ஏ.டி.எம். கார்டு இருப்பதால் பணம் எடுத்து கொள்ளலாம் என நினைத்து அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்து விட்டோம். இங்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, எங்களது கார்டு வேலை செய்யவில்லை. சிகிச்சை பெற அவசரமாக ரூ.2000 தேவைப்படுகிறது. உங்களிடம் கையில் இருக்கும் பணத்தை கொடுத்தால், எங்களது செல்போனில் இருந்து ஜிபே மூலமாக பணம் அனுப்பி விடுகிறோம் எனக் கூறினர். ஆஸ்பத்திரி, அவசரம் என கூறியதை நம்பிய சக்திவேல், அவர்களிடம் ரூ.2 ஆயிரம் கொடுத்தார். அதை வாங்கி கொண்ட அவர்கள், ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாக கூறி தங்களின் செல்போனில் இருந்த குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்தனர். அதை பார்த்த அவரும் பணம் வந்துவிட்டதாக கருதினார். அதன்பிறகு அவர்கள் இன்னும் ரூ.2000 கொடுத்தால் அதையும் ஜிபே மூலம் அனுப்பி விடுவதாக கூறினர். அதை நம்பி அவர் மீண்டும் ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். உடனே அவர்கள் ஜிபே மூலம் அனுப்பி விட்டதாக கூறி செல்போன் குறுஞ்செய்தியை காண்பித்து விட்டு சென்றனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு சக்திவேல் தனது வங்கிக்கணக்கிற்கு வந்த பணத்தை சரி பார்த்தார். அப்போது தான் தன்னிடம் பணம் வாங்கிய தம்பதி அனுப்பியதாக கூறிய பணம் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை என்பதும், அவர்கள் தன்னிடம் ரூ.4000ஐ மோசடி செய்து விட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தான் இதேபோல் மேலும் பலரிடம் அந்த தம்பதி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மோசடி தம்பதியை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோசடி தம்பதி வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தம்பதி, சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் முகமது ரிஸ்வான், அவருடைய மனைவி சர்மிளா பானு (20) என்பதும், அவர்கள் 2 பேரும் காதலித்து 1½ மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. அந்த தம்பதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த தம்பதி மொத்தம் 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது