ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் இனி வெட்கப்படுவார்கள் - அமித் ஷா அதிரடி பேச்சு!
Seithipunal Tamil June 20, 2025 01:48 AM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டில் பேசிய அவர், "இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகுவிரைவில் வரும்" என்றார்.

"இந்திய மொழிகள் நமது கலாசாரத்தின் ஆழமான அடையாளங்கள். அவற்றை மீட்டெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு அந்நிய மொழியில் நம் வரலாறும், மதத்தையும், கலாசாரத்தையும் உணர முடியாது. முழுமையற்ற அந்நிய மொழியில், முழுமையான இந்தியாவை உருவாக்க முடியாது" என்று அவர் கூறினார்.

"நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் – விரைவில் இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுவதே வெட்கக்கேடான செயலாக கருதப்படும். இந்திய மொழிகளில் பேசுபவர்களே எதிர்கால மாற்றத்தை உருவாக்குவார்கள். போராட்டம் கடினமானது என்பதை நான் உணர்கிறேன். ஆனால், இந்தப் பிழையை சரி செய்யும் தைரியம் இந்த சமூகத்தில் உள்ளது" என்றும் அவர் கூறினார்.

2047ஆம் ஆண்டில் இந்தியா உலகளாவிய முன்னேற்றத்தின் உச்சிக்கேறும் போது, அதற்கு பங்களிப்பதற்கான முக்கிய மூலதனம் நமது மொழிகளாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.