பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளர், அலுவலக வீடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். தன்னுடைய தலைமை செயல் அதிகாரி கடுமையான வார்த்தைகளால் அவரை திட்டியதே இதற்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, உடனிருந்த தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு மாதங்களாக தொடர்ந்த பணிச்சூழல் அழுத்தமும், துன்புறுத்தலும் இந்த சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த நிகழ்வு, இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஊழியர்களின் மனநலம் மற்றும் வேலைச்சூழல் கொடுமைகள் குறித்து புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
“என்னால் மூச்சுவிடவே முடியவில்லை. என் நெஞ்சு வலித்தது, மூச்சுத்திணறி, இருக்கையிலேயே சாய்ந்துவிட்டேன்,” என்று பாதிக்கப்பட்ட ஊழியர் ரெடிட் தளத்தில் எழுதியுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “நல்லவேளை, பக்கத்து அறையிலிருந்து சத்தம் கேட்டு என் அம்மா ஓடி வந்து, உடனடியாக என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மென்பொருள் பொறியாளர், தன் முதலாளியை “சாத்தானின் மறுவடிவம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த தலைமை செயல் அதிகாரிக்கு தொழில்நுட்ப பின்னணி கொஞ்சமும் இல்லை என்றாலும், தன்னை ஒரு பெரிய டேட்டா சயின்ஸ் நிபுணர் போல காட்டிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். “அவர் யாராலும் செய்ய முடியாத காலகட்டத்திற்குள் ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என நிர்ணயிப்பார்; தனக்கு தோன்றும்போதெல்லாம் திட்டத்தின் மாற்றுவார்; பிறகு, அவரது கற்பனைகளுக்கு ஏற்ப யதார்த்தம் இல்லாதபோது முழுமையாக பைத்தியமாகிவிடுவார்,” என்று அந்த ஊழியர் தனது பதிவில் விரிவாக எழுதியுள்ளார்.
ஒவ்வொரு நாளும். என் வேலையின் ஒவ்வொரு சின்ன சின்ன விவரத்தையும் நேரடியாக அவரிடம் விளக்க வேண்டும் என்று இந்த நபர் கோருவார். என் விளக்கம் பிழையின்றி இல்லாவிட்டால், அல்லது அவருக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏதாவது புரியவில்லை என்றால், அவர் முற்றிலும் வெடித்துவிடுவார்,” என்று அவர் எழுதியுள்ளார். “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் என்னை சிதைக்கும் கடுமையான போராட்டங்களை நான் சந்தித்தேன்.”
வார இறுதி நாட்கள் உட்பட ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை உழைத்தும், தனது அர்ப்பணிப்பு ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்று அந்த மென்பொருள் பொறியாளர் தெரிவித்தார்.
ஊழியர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்கு பிறகு தனது தலைமை செயல் அதிகாரி மீண்டும் அழைத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர் பேசிய சொற்கள் மிகவும் கொடூரமாக இருந்ததால் நான் அதிர்ச்சி அடைந்து சரிந்து விழுந்தேன்,” என்று அவர் விவரித்தார்.
ராஜினாமா செய்த பிறகும், நிறுவனத்தின் மனிதவளத் துறை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அந்த மென்பொருள் பொறியாளர் குற்றம் சாட்டினார். எனது பிஎஃப் பரிமாற்றம் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு, தனது அடுத்த வேலை வாய்ப்புகளை கெடுக்கும் முயற்சி நடந்ததாகவும் அந்த ஊழியர் புகார் கூறியுள்ளார்.
இதுபோன்ற ஒரு மோசமான சூழலில் சிக்கித் தவிக்கும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் சம்பளத்தை விட மனநலம் மிகவும் முக்கியம். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். ஒருவர் உங்களை தொடர்ந்து தகுதியற்றவராக உணர வைத்தால், பிரச்சனை அவரிடம் உள்ளது, உங்களிடம் அல்ல என்பதை புரிந்துகொண்டு உடனடியாக வெளியேறிவிடுங்கள்’ என்றார்.