தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி, நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என்பதை இந்த விமர்சனத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
குபேரா – கதைக்களம்
மத்திய அரசின் ஒரு திட்டத்தை பெறுவதற்காக, ஒரு லட்சம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக கைமாற்ற வில்லன் ஜிம் சர்ப் திட்டமிடுகிறார். இதற்காக, சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவின் உதவியை அவர் நாடுகிறார். கால சூழ்நிலை காரணமாக வில்லன் கும்பலுடன் கைகோர்க்கும் நாகார்ஜுனா, இந்த பண பரிமாற்றத்தை செய்வதற்காக கல்வி அறிவு இல்லாத நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார். அவர்களில் ஒருவர்தான் தனுஷ்.
இந்த நான்கு பேரின் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி பண பரிவர்த்தனைகள் முடிந்தவுடன், பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில், கடைசியாக தனுஷை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படும்போது, அவர் எதிர்பாராத வகையில் தப்பித்து விடுகிறார். இதனால் பண பரிவர்த்தனை தடைபடுகிறது. இதை தொடர்ந்து, தனுஷை உயிருடன் பிடிக்க வில்லன் மீண்டும் நாகார்ஜுனாவின் உதவியை நாட, நாகார்ஜுனா தலைமையில் ஒரு குழு தனுஷை தேடுகிறது.
இதற்கிடையில், காதலனால் ஏமாற்றப்பட்டு அனாதையாக நிற்கும் ராஷ்மிகா மந்தனாவை தனுஷ் தற்செயலாக சந்தித்து, அவருடன் கைகோர்க்கிறார். ஒரு பக்கம் தனுஷை வில்லன் குழு விரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தன்னை மட்டுமின்றி ராஷ்மிகாவையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் தனுஷ் இருக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிப்பில் மிரட்டிய கலைஞர்கள்!
தனுஷ் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய மாஸ் நடிகர் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அதில் தனுஷ் மிகவும் அற்புதமாக நடித்திருப்பதை பார்க்கும்போது, அவருக்கு இன்னொரு தேசிய விருது காத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இதுவரை கிளாமர் நடிகையாக மட்டும் வந்து கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, தனுஷுடன் சேர்ந்து குப்பை மேட்டில் சுற்றி திரியும் காட்சிகள் பார்க்க அழகாக இருக்கின்றன.
சூழ்நிலைக்காக வில்லன் குழுவிடம் கைகோர்க்கும் நாகார்ஜுனாவின் நடிப்பும் எதார்த்தம். அவருடைய கண்களே பல பக்கங்கள் வசனங்களைப் பேசி இருக்கின்றன. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வில்லன் கிடைத்துவிட்டார் என்பது ஜிம் சர்ப் நடிப்பின் மூலம் தெரிய வருகிறது. அட்டகாசமாக அவர் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார். மேலும், சுனைனா, நாசர் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
படத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ்!
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்குப் பலம் என்றால், பல இடங்களில் லாஜிக் மீறப்பட்டுள்ளது படத்திற்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று மணி நேர நீளம் என்பது ஒரு பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. அதேபோல், தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் காட்சி கூட இல்லை என்பதும் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு குறையாக இருக்கும். மற்றபடி, ‘குபேரா’ குப்புற விழாமல் கம்பீரமாக ஒரு வெற்றி படமாகத்தான் வலம் வரும் என்று தெரிகிறது.