சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன், அந்நிறுவன பங்குகளை முறைகேடாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்ட 8 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சன் குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததாக செய்தி வெளியானது. இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக்கு விளக்கம் அளித்து சன் டிவி நிறுவனம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், தயாநிதி மாறன் முன் வைத்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை மற்றும் ஆதாரமற்றவை, அவதூறானவை என சன் டிவி நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அதில் 22 ஆண்டுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்தபோது இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.