இதை சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது! பழைய வழக்கை தோண்டி எடுக்கும் பாஜக!
Seithipunal Tamil June 21, 2025 06:48 AM

பாரதிய ஜனதா கட்சி.மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விசுத்துள்ள செய்திக்குறிப்பில், "சன் தொலைக்காட்சியின் கலாநிதி மாறன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அவரின் சகோதரரும் திமுக வின் பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அவர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருப்பது வியப்பளிக்கவில்லை.

சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியதிலிருந்தே அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுவருவதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்று உண்மையாக வெளிவந்திருக்கிறது.

பணமோசடி, சட்ட விரோத பணப்பரிமாற்றம், ஏமாற்று வேலை, பங்குச்சந்தைக்கு தவறான தகவல் அளித்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளை சன் நிறுவனத்தின் மீது பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை சாதாரணமாக கடந்து போய் விடக்கூடாது. திமுக வின் கைப்பாவையாக, குரலோசையாக செயல்பட்டு வருகின்ற சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடர்புடையவர்களே சுமத்தியிருப்பது குறித்து தமிழக காவல் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவதோடு, புகார்தாரர் தயாநிதி மாறன் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும்.

எந்தெந்த மாதிரியான மோசடிகள், பணப்பரிமாற்றங்கள், ஏமாற்று வேலைகள், பொருளாதார மோசடிகள் நடைபெற்றுள்ளன என்பதை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக காவல் துறைக்கு உள்ளது. 

மேலும், தயாநிதி மாறன் அவர்கள் அமைச்சராக இருந்த  2002 முதல் 2006 காலகட்டத்தில் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக நடைபெற்ற தொலைபேசி இணைப்பக முறைகேடு குறித்த விசாரணையை மீண்டும் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் அவர்களிடத்தில் விசாரிப்பது பெரும் பலனை தரும்.

அதே போல் முதல் தகவல் அறிக்கை பதிந்த பின்னர் ஏனைய புலனாய்வு அமைப்புகள் விரைந்து செயல்பட்டு, சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதான தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுகளை விசாரித்து உண்மையை மக்கள் முன் தெரிவிப்பதோடு, குற்றம் நிரூபணமானால் உரிய தண்டனையை பெற்று தர வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.