தங்க கட்டி சிக்கியது..4 பேர் கைது!
Seithipunal Tamil June 21, 2025 06:48 AM

கோவில்பட்டியில் நகைகள் திருடிய சென்னையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர், 16 ½ சவரன் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மாவட்ட போலீசார் கண்காணித்து  தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர்.இதேபோல கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் திருடர்களை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, போலீசார் தீவீர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன்படி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று கோவில்பட்டி, இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.அப்போது கடந்த 1.6.2025 அன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சக்கரபாணிநகரைச் சேர்ந்த  நல்லசிவன் வீட்டில் பூட்டை உடைத்து 19½ சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த  சதீஷ், சாத்தூர் புல்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த  முத்துராஜா மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த  பொன்முருகன் ஆகியோரை  கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் சுமார் 16½ சவரன் தங்க கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை கைப்பற்றியதோடு, அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.