தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகளான பேதொங்தார்ன் ஷினவத்ரா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தாய்லாந்துக்கும், அதன் அண்டை நாடான கம்போடியாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை உள்ளது.
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் உள்ள எமரால்டு முக்கோணம் எனப்படும் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே கடந்த மே 28-இல் மோதல் ஏற்பட்டது.அதில், கம்போடியோ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், செனட் சபை தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் கசிந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உரையாடலின் போது தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா,அந்நாட்டின் ராணுவ தளபதியை எதிரி என்றும், பயனற்றவற்றை பேசுவதாகவும் கூறியிருந்தார். இந்த தகவல் கசிந்த பின் முழு உரையாடலையும் ஹுன் சென் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், தாய்லாந்து பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரை பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அத்துடன், 'வெளிநாட்டிடம் நம் நாட்டு ராணுவத்தின் கண்ணியத்தை விட்டுக்கொடுத்துவிட்டார்' என்று கூறி பும்ஜைதாய் கட்சி கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இக்கட்சிக்கு பாராளுமன்றத்தில்69 எம்.பி.,க்களின் பலம் உள்ளது. குறித்த கட்சியின் விலகலால் பிரதமர் ஷினவத்ரா அரசுக்கு நுாலிழையிலான பெரும்பான்மையே உள்ளமை பேரிடியாக அமைந்துள்ளது.