அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12-ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் வெடித்து சிதறியதால் ஒரு பயணியை தவிர விமானத்திலிருந்து 241 பயணிகள், பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்திய விமான சேவையில் கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்தாகவும் உலக அளவில் முதல் போயிங் 787 விபத்தாகவும் இது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று மூத்த அதிகாரிகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க விமான போக்குவரத்து துறை ஆணை பிறப்பித்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக மூன்று அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.