சீனாவின் ஷாங்காய் நகரத்தில் வசிக்கும் 60 வயதுடைய செங் என்ற பெண், ஒரு மிகவும் விசித்திரமான பழக்கத்தால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பலரை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளார். அதாவது ரூ.42 கோடி மதிப்புள்ள (சுமார் 36 மில்லியன் யுவான்) ஆடம்பரமான 157 சதுர மீட்டர் அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் இவர், தினமும் நகரில் கிடைக்கும் பழைய பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை சேகரித்து தன் வீட்டுக்குள் கொண்டுவந்து வைப்பதையே தன் வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், அவரது வீட்டில் மட்டுமல்லாமல், அடுக்குமாடி பகுதியில் உள்ள பொது நடைபாதைகளிலும் குப்பைகள் காணப்படுவதால், அண்டை வீட்டாருக்கு பெரும் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.
முதலில், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செங் அவர்களின் மகளை தொடர்பு கொண்டு, இந்த பழக்கத்தை நிறுத்தும்படி கேட்டனர். மகளும் தொடக்கத்தில் ஒத்துழைத்தபோதும், சில நாட்களில் “தாயின் விஷயங்களில் தலையிட விரும்பவில்லை” எனக்கூறி விலகிவிட்டார். இதனால், அந்தச் சொசைட்டியின் நிர்வாகத்தினர் 2023ம் ஆண்டு செங் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால், அவரது பழக்கத்தில் எந்த மாற்றமும் வராததால், 15வது மாடியில் வசித்த ஒரு தம்பதியினர் தங்களால் இந்நிலையை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலும், தங்கள் பிளாட்டை விற்றுவிட்டு வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
ஷாங்காய் நகரத்திலுள்ள அந்த உயரிய தரமான அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள், மிகவும் அமைதியாகவும் சுத்தமாகவும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் செங் தனது பழக்கத்தால் அந்த முழு சொசைட்டியின் சூழ்நிலையையும் அமைதியையும் பாதித்துள்ளார். தற்போது, மற்ற அண்டை வீட்டாரும் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கலக்கத்தில் இருக்கின்றனர். மேலும் ஒரு நபரின் தனிப்பட்ட பழக்கம், சமூக வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றே பொதுமக்கள் கூறுகின்றனர்.