செம்மண் முறைகேடு வழக்கு..பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு!
Seithipunal Tamil June 22, 2025 05:48 PM

செம்மண் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.

2006-2011-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க., ஆட்சியில்  கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார். அவர் அடிக்கடி சர்ச்சை பேச்சுக்களை பேசி சிக்கி கொள்வார்.அதுமட்டுமல்லாமல் வழக்குகளில் சிக்கி அமைச்சர் பதவியும் தற்போது இழந்துள்ளார். 

2006-2011-ம் ஆண்டுகளில் அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில், அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், சுமார் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்தநிலையில், இந்த செம்மண் முறைகேடு மூலம் கிடைத்த பெருந்தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறி பொன்முடி, அவரது மகன்கள் கவுதம் சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பொன்முடி மனு தாக்கல் செய்தார்.

அதில், நான் தற்போது எம்.எல்.ஏ. வாக உள்ளேன். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பணி மேற்கொள்ளவேண்டும். என் வயதை கருத்தில் கொண்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓம்பிரகாஷ், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், கோர்ட்டு உத்தரவிடும்பட்சத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.