திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் மிகவும் பிரபலமான “பேய்களின் சமையலறை” என்று அழைக்கப்பட்டு வந்த குகை நடிகர் கமலஹாசன் நடித்த பின் “குணா குகை” என்று அழைக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து தற்போது “மஞ்சுமல் பாய்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் குணா குகைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அங்கு சென்று பலரும் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே அந்த குகை பகுதிகளில் உள்ள ஆபத்தான இடங்களில் தவறி விழுந்து பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். எனவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி குணா குகை பகுதிக்கு செல்வதை தடுப்பதற்காக இரும்பு வலைகள் அமைத்துள்ளனர். இருந்தும் சில இளைஞர்கள் ரீல்ஸ் செய்வதற்காகவே நுழைவுக் கம்பிகளை தாண்டி குதித்து உள்ளே சென்று விடுகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து வனத்துறையினருக்கு புகார்கள் வருவதால், குணா குகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்புகளில் கூடுதலான இரும்பு வலைகளும் சில இடங்களில் கூடுதல் கம்பிகளும் இணைக்கப்பட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
மேலும் அப்பகுதிக்கு உள்ளே ஏறி குதித்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.