கோவை விமான நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் 'செல்வப்பெருந்தகை' இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"இந்தியா கூட்டணி வலிமையாக, வலுவாக இருக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜ.கவினர் தெரிவிப்பது போன்று எங்கள் கூட்டணியில் எந்தவித ஓட்டையும் இல்லை.
எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.எங்கள் கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும், சிதறும், அதனால் தங்களுக்கு ஆதாயம் ஏற்படும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.கவும் பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் எந்தவித குழப்பமும் ஏற்படாது.எங்கள் கூட்டணி ஒன்றும் சிதறுவதற்கு நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இந்த கூட்டணியானது எக்கு கோட்டையாகும்.
எங்கள் கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதனை எல்லாம் நாங்களே பேசி தீர்த்து கொள்வோம்.தமிழகத்தில் யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ, அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார்.தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன. எதற்காக நடத்துகிறார்கள். அயோத்தியில் ராமரை நாடினார்கள்.
ஆனால் அங்கு பா.ஜ.க.வை ராமர் கைவிட்டு விட்டார். பா.ஜ.க கட்சி மக்களை நம்பி இருப்பது இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வது தான் பா.ஜ.கவின் வேலையாக உள்ளது.பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவே இல்லை. மணிப்பூருக்கு செல்லாமல் இங்கே இவர்கள் முருகன் மாநாடு நடத்தி விட்டால், அவர்களை முருகன் மன்னித்து விடுவாரா?. மேலும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு தர மறுக்கிறது.மத்தியில் காங்கிரஸ் இருந்தவரை தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் இருந்தது.
பா.ஜ.க வந்த பிறகு தான் தமிழகத்தில் 3-வது மொழியை திணிக்கிறார்கள்.தமிழ் மொழியை நீங்கள் சிதைக்கிறீர்கள். தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள். மேலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள்.அப்படி இருக்கையில் தமிழ்க்கடவுள் முருகன் உங்களை எப்படி ஏற்றுக்கொள்வார். தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் வருகிற 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் உங்களை அவர் சூரசம்ஹாரம் செய்வார். பா.ஜ.க.வினரின் வேஷம் சில மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம்.
ஆனால் முருக கடவுளை ஏமாற்ற முடியாது.ஆங்கிலத்திற்கு எதிராக பேசும் அமித்ஷாவின் மகனே, ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் தற்போது ஆங்கிலம் பேசி வருகிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அப்படி பேசுகின்றனர். எடப்பாடி பழனிசாமியை பார்த்து அமித்ஷா, இ.பி.எஸ். என்கிறார். அவ்வாறென்றால் அவர் இ.பி.எஸ்.சை அவமானப்படுத்துகிறாரா? விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்திருக்கலாம். அல்லது உபாதை இருக்கலாம். அதனால் அழித்து இருப்பார்கள். அதனை அரசியல் படுத்தக்கூடாது" என்று தெரிவித்தார்.