அமெரிக்கா தொடங்கிய போரை ஈரான் முடித்து வைக்கும்... ஈரான் எச்சரிக்கை!
Dinamaalai June 23, 2025 01:48 AM


ஈரான் அணுசக்தி உற்பத்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு செளதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து செளதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில்  ''செளதி அரேபியாவின் சகோதர நாடான ஈரானின் சமீபத்திய நிலையை கவனித்து வருகிறோம். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் கவலை அளிக்கிறது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.


இத்துடன் ''பதற்றத்தைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தீவிரமான சூழலைத் தணிக்கும் வகையில்  அரசியல் ரீதியில் தீர்வு காணவும், போரைத் தவிர்க்கவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளது.  
ஈரான் மீது சனிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் மூலம் 3  இடங்களில் அமெரிக்கா குண்டுகளை வீசித் தாக்குதல் மேற்கொண்டது. ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3  அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் தெரிவித்துள்ளார்.  


ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவந்த அமெரிக்கா, நேற்று இரவு ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து ஈரான் செய்தி ஊடகங்கள் அமெரிக்கா தொடங்கிய போரை ஈரான் முடித்துவைக்கும் என செய்தி  வெளியிட்டுள்ளன. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.