கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக இரவு பகல் பாராமல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக இணையத்தில் பரவிய வீடியோக்கள், காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்தன.
அதில் ஒரு வீடியோவில், 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கழுத்தளவு தண்ணீரில் மூழ்கிய படி பள்ளி சீருடைகள் முழுமையாக நனைந்தபடி புத்தகப்பையினை இரு கைகளால் உச்சந்தலையில் ஏந்தியவாறு வேதனையுடன் ஆற்றினைக் கடந்து பள்ளிக்குச் செல்வதைக் காணமுடிந்தது.
இது குறித்து விசாரித்தோம்...,
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே முஸ்கந்தா ஆறு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 12-ம் தேதி முஸ்கந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுவட்டார கிராமத்தில் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதிலும் குறிப்பாக பவுஞ்சிப்பட்டு, குமாரமங்கலம், காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காகவும் பள்ளிக் கல்லூரிக்குச் செல்வதற்காகவும் குமாரமங்கலம் - புதுப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள ஆற்றினைக் கடந்துதான் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற நகரங்களுக்குச் செல்ல வேண்டியதாக உள்ளது. அண்மையில் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக முஸ்கந்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பள்ளிக் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், விவசாயிகள் என அனைவரும் வேறு வழியின்றி, ஆபத்தை உணராமல் முஸ்கந்தா ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
``கனமழை வந்தாலே இதுதான் பெரும் துயரமாக இருக்கிறது" என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என அப்பகுதி மக்கள், புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் முஸ்கந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் எனப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நனைந்த ஆடைகளுடன் மிகவும் தாமதமாகத் தினம்தோறும் பள்ளிக்குச் செல்வதாகவும் பள்ளி முடிந்த பிறகு வீடுகளுக்கு வர மிகவும் தாமதமாவதாகவும், தண்ணீரில் அன்றாடம் செல்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகும் பள்ளிக் குழந்தைகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, "நான் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். இது குறித்து அரசு தரப்பு பொறியாளர்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு வைத்துள்ளனர். விரைந்து நடவடிக்கை மேற்கொள்கிறோம்" எனக் கூறினார்.
வருவது மழைக்காலம்... மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, துரிதமாக பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!