பல ஆண்டுகளாக, அமெரிக்காவும் இரானும் ஒரு ஆபத்தான எல்லையைக் கடக்காமல், நேரடி ராணுவ மோதலில் ஈடுபடுவதை கவனமாகத் தவிர்த்து வந்தன.
அமெரிக்கா ஒரு மிகப்பெரிய மத்திய கிழக்குப் போரில் சிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த அமெரிக்க அதிபர்கள் அனைவரும், இரானுக்கு எதிராக தங்கள் ராணுவ சக்தியை பயன்படுத்துவதைத் தவிர்ந்து வந்துள்ளனர்.
அமைதிக்கான அதிபராக இருப்பேன் என உறுதி அளித்த அதிபர் டிரம்ப், இப்போது தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முக்கியமான முடிவை எடுத்துள்ளார். பழைய விதிகளை உடைப்பதில் பெருமை கொள்ளும் அவர், இரானின் அணுசக்தித் தளங்கள் மீது நேரடியாக ராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த முடிவு பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
முன் எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையால் பல நாடுகளின் தலைநகரங்களில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரான் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கை இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
அந்நாட்டின் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி, தற்போது ஒரு பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளாக, தான் மிக முக்கியமானதாக கருதும் இஸ்லாமியக் குடியரசை பாதுகாக்க, தமது சக்திவாய்ந்த எதிரியான அமெரிக்காவுக்கு எதிராக, காமனெயி மிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
அவர் குறைவாக எதிர்வினை ஆற்றினால், தன் மரியாதையை இழக்க நேரிடும். அவரது எதிர்வினை அதிகமாக இருந்தால், எல்லாவற்றையும் இழக்கும் ஆபத்து உள்ளது.
"காமனெயியின் அடுத்த நடவடிக்கைகள் அவரது சொந்த உயிருக்கு மட்டுமல்ல, வரலாற்றில் அவர் எவ்வாறு நிலைத்திருப்பார் என்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்" என்கிறார் சாதம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்ட இயக்குனர் சனம் வக்கீல்.
"அவர் தற்போது எடுக்கப் போகும் முடிவு, 1988-ல் காமனெயி எடுத்த கடினமான முடிவை விட முக்கியமானதாக இருக்கலாம்" என்று சனம் கூறுகிறார்.
அப்போது, இரான்-இராக் போர் மிகுந்த அழிவை ஏற்படுத்தியபோது, காமனெயி மிகவும் கசப்புடன் போர்நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டார்.
கடந்த பத்து நாட்களில், இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதல்களால், இராக் உடனான போரை விட அதிகமான சேதங்களை இரானின் இராணுவ கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் ஆயுதங்களும் சந்தித்துள்ளன.
அந்த தாக்குதலின் எச்சங்கள் இன்னும் இரானிய சமூகத்தில் நிழலைப் போல் பின்தொடர்கின்றன.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவும் இதில் இணைந்துகொண்டதால், இந்த மோதலில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
1979-ல் நடந்த இரான் புரட்சிக்கு பிறகு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது அமெரிக்காவிற்கு "நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் கூர்மையான வார்த்தைப் போருக்குப் பின்னால், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தவறான கணக்கீட்டைத் தவிர்க்கும் அவசர முயற்சிகளும் நடைபெறுகின்றன.
"இரான் இந்தப் போரை விரும்பவில்லை" என்கிறார் மத்திய கிழக்கு உலக விவகார கவுன்சிலின் ஹமித்ரெஸா அஜீஸ்.
தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்கா ஏற்படுத்திய சேதத்தின் அளவு எதுவாக இருந்தாலும், இரான் ஒரு வலிமையான நாடாகவும், பிராந்தியத்தில் முக்கிய சக்தியாகவும் இருந்த பிம்பம் பெரிதாகக் குலைந்துவிட்டதாக ஆட்சியை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். அதற்கு ஒரு பதில் நடவடிக்கை தேவை என்று அவர்கள் கூறுவதையும் நம்மால் காணமுடிகிறது" என்று குறிப்பிட்டார்.
பதில் நடவடிக்கை எதுவாக இருந்தாலும், அது ஆபத்தானதாக இருக்கக்கூடும்.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் அல்லது 40,000க்கும் மேற்பட்ட அமெரிக்க படைவீரர்கள் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா மிகப்பெரிய பதிலடி நடத்த வாய்ப்பு அதிகம்.
ஹோர்முஸ் கடல்வழியை மூடுவது, உலக எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கிய கடல்வழியை பாதிக்கும். இது அரபு நட்பு நாடுகளையும், இரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் முக்கிய நாடான சீனாவையும் கோபப்படுத்தி, பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த "முக்கிய கடல்பகுதியைப்" பாதுகாக்கவும், பொருளாதார நெருக்கடிகளைத் தவிர்க்கவும் மேற்கத்திய கடற்படைகள் இந்த மோதலில் தலையிட வாய்ப்புள்ளது.
இரான் தனது "முன்கூட்டிய தற்காப்பு திட்டம்" என்று கருதிய, பிராந்தியம் முழுவதும் உள்ள பிரதிநிதிகள் மற்றும் கூட்டாளிகளின் வலையமைப்பு, கடந்த 20 மாத போரில் இஸ்ரேலின் தாக்குதல்களாலும், குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளாலும் பலவீனமடைந்துவிட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது.
அமெரிக்காவின் கோபத்தைத் தூண்டாமல், இரான் பதில் தாக்குதல் நடத்த ஏற்ற ஒரு வரம்பு இருக்கிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை. அப்படி ஒரு அளவு இருந்தால், இரு தரப்பும் போரின் விளிம்பில் இருந்து பின்வாங்க முடியும்.
இந்த சிக்கலான உறவு முன்பு ஒருமுறை சோதனைக்கு உள்ளானது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில், பாக்தாதில் ட்ரோன் தாக்குதலில் இரானின் ராணுவத் தளபதி (IRGC) காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது பெரும் மோதலைத் தூண்டுமோ என்று பலர் அஞ்சினர்.
ஆனால், இரான் தனது பதிலடியை முன்கூட்டியே திட்டமிட்டு, இராக் அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவித்து, அமெரிக்கத் தளங்களின் சில பகுதிகளை மட்டும் தாக்கியது. இதில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பதையோ, பெரிய சேதத்தையோ தவிர்க்கும் வகையில், இரான் எச்சரிக்கையுடன் செயல்பட்டது. ஆனால் இப்போது நிலைமை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமானதாக உள்ளது.
"இரானில் குண்டு வீசி அழிப்பதை விட, அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன்" என்ற பலமுறை கூறிய அதிபர் டிரம்ப், தற்போது இஸ்ரேலின் பக்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இரானை "மத்திய கிழக்கின் வன்முறையாளர்" என விவரித்த டிரம்ப், அந்த நாடு அணுகுண்டு உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது என்று கூறினார். ஆனால், அவரது கூற்றை முந்தைய அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்தவில்லை.
"அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய B-2 தாக்குதல்" என்று பென்டகன் கூறிய நடவடிக்கையின் விளைவுகளை, உளவுத்துறை குழுக்கள் இப்போது விரிவாக ஆய்வு செய்கின்றன. இந்த தாக்குதல், இரானின் முக்கிய அணு தளங்களான நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவில் "மிகக் கடுமையான சேதத்தையும் அழிவையும்" ஏற்படுத்தியது.
இரானில் மலையின் ஆழத்தில் அமைந்துள்ள ஃபோர்டோ தளத்தை ஊடுருவ, "பதுங்கு குழிகளை உடைக்கும்" குண்டுகளால் மட்டுமே முடியும்.
அதிபர் டிரம்ப் தற்போது இரானை "அமைதிக்கான பாதையில் வாருங்கள்" என்று அழைக்கிறார்.
ஆனால், இப்போது இரான், அமெரிக்காவின் ராஜ்ஜீய வழியையும், சரணடைவதாகவே கருதுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில், இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஐரோப்பிய பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, அமெரிக்கா இரானிடம் அதன் அணு செறிவூட்டலை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கையை இரான் நிராகரிக்கிறது.
ஏனெனில் இது அந்நாட்டின் பொதுமக்களுக்கு உதவும் அணுசக்தி திட்டத்திற்காக யுரேனியத்தை செறிவூட்டும் இறையாண்மை உரிமையை மீறுவதாகக் கருதுகிறது.
அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நடத்திய ஐந்து சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள் உட்பட, அவரது ராஜ்ஜீய முயற்சியை இப்போது ஒரு பெரிய ஏமாற்று வேலையாகக் கருதுகிறது இரான்.
"அமைதி நடவடிக்கைகளை குலைத்தது அமெரிக்கா தான், இரான் அல்ல" என்று இஸ்தான்புலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார் அரக்சி.
இந்த நிகழ்வின் போது, "இஸ்ரேலின் கடுமையான போக்கைக் கண்டிப்பது" மட்டுமன்றி, இந்த "ஆபத்தான சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ள" 57 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை அவர் சந்தித்தார்.
ஐநா சபையின் சாசனங்களுக்கு எதிராகவும், "எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும்" அணுசக்தி கட்டமைப்புகளைத் தாக்கக் கூடாது என்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் எச்சரிக்கைகளையும் மீறி தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ளத் தாக்குதல்களை உலகின் கவனத்திற்கு கொண்டுவர இரான் முயற்சித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் இந்த பதற்றத்தை உடனடியாக குறைக்கவும், இரானின் அணுசக்தி திட்டத்தை, ஏவுகணைகளுக்கு மாறாக, மத்தியஸ்தம் செய்வதன் மூலம் கட்டுப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதேசமயம் இரானுக்கு அணுகுண்டு கிடைக்கக்கூடாது என்பதையும் இந்த நாடுகள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.
60% யுரேனியத்தை சுத்திகரிப்பதன் மூலம் 90% அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு இரானுக்கு வாய்ப்பு இருப்பதால், அதன் நோக்கங்கள் தவறாக இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறி இது என்று இந்த நாடுகள் கருதுகின்றன.
"இரான், தனது அணு தளங்களுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும், இந்த எதிர்பாராத தாக்குதல்களுக்குப் பிறகும் தனது அணுசக்தி திட்டம் தொடர்கிறது என்றும் கூறி, இரான் நம்ப வைக்க முயற்சிக்கலாம்" என்கிறார் ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க திட்டத்தின் துணைத் தலைவர் எல்லி கெரான்மயே.
மறுபுறம், "அமெரிக்கா சேதத்தை அதிகப்படுத்திக் காட்டலாம், இதனால் டிரம்ப் மேலும் தாக்குதல்களில் ஈடுபடாமல் ராணுவ வெற்றியடைந்து விட்டதாக அறிவிக்க முடியும்."
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழுத்தத்தால், இரானுக்கு மேலும் சேதம் விளைவிக்க, தனது பலமான படைகளுடன் தாக்குதலைத் தொடரும் திசையில் அதிபர் டிரம்ப் இழுக்கப்படுவார். இது இரானை மேலும் பதில் தாக்குதல்களில் ஈடுபடத் தூண்டும்.
ஆனால், அமெரிக்காவில், நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், நீண்ட போர்களில் இருந்து அமெரிக்காவை விலக்கி வைப்போம் என்ற வாக்குறுதியை மீறிவிட்டதாக நம்பும் ஆதரவாளர்களிடமிருந்தும், அதிபர் டிரம்ப் கடும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
மேலும் இந்த சமயத்தில் இரானில் முடிவெடுக்கும் நிலையில் உள்ள உச்சத் தலைவர்கள், தங்கள் நாடு நேரடி தாக்குதலுக்கு இலக்காக மாறுவதை தவிர்ப்பதற்கான வழி குறித்து யோசிக்கும் அதே நேரத்தில், தங்கள் எதிரிகள் தங்களை தாக்காமல் தடுப்பதற்கான வலிமையை மீண்டும் எப்படி பெறுவது என்பது குறித்து சிந்திப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
"இது ஒரு மிகப்பெரிய முரண்" என்று எச்சரிக்கும் ஜெரான்மயே, "இரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் டிரம்ப் செயல்பட்ட போதிலும், அவரது நடவடிக்கைகள் இரான் அணு ஆயுதம் கொண்ட நாடாக மாறும் சாத்தியத்தை இப்போது மேலும் அதிகமாக்கி உள்ளது" என்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு