அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியது. பலியானவர்களில் இளம் விமானப் பணிப்பெண் ஒருவரும் இருந்தார். அவர் வளர்ந்து வரும் கலைஞர் சாகர் பாட்டிலின் காதலி. இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், குடும்பத்தினர் தங்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புடன் போராடி வந்த நிலையில், சாகர் தனது மறைந்த காதலிக்கு இன்ஸ்டாகிராமில் உருக்கமான அஞ்சலிகளை செலுத்தினார். ஆனால், இரக்க உணர்வுடன் தொடங்கிய இந்தக் கண்ணீர் அஞ்சலி, இப்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில், சாகரின் உணர்ச்சிகரமான பதிவுகள் பின்தொடர்பவர்களை மிகவும் கவர்ந்தன. இதயத்தை நொறுக்கும் பதிவுகள், கவித்துவமான தலைப்புகள் மற்றும் பழைய நினைவுகள் ஆகியவை அன்பையும், அனுதாபத்தையும், இரக்கத்தையும் பெற்றன. விபத்தின் துயரத்திலிருந்து மீளாத பொதுமக்கள், அவரது வேதனையை தங்கள் வேதனையாகவே கருதி ஆதரித்தனர். ஆனால், சில நாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியது.
சாகரின் கணக்கு, ஒரு காலத்தில் தனிப்பட்டதாகவும் அமைதியாகவும் இருந்தது, இப்போது மாற்றத்திற்கு உள்ளானது. அவரது பெயருக்கு அருகில் ப்ளூ டிக் தோன்றியது. அவரது காதலியின் மரணத்தை பற்றிய ரீல்ஸ், இப்போது டிரெண்டிங் ஆடியோக்களுடனும், மெருகூட்டப்பட்ட எடிட்டிங்களுடனும் வெளிவந்தன. அவரது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. துயரத்தை இவ்வாறு திடீரென ஒரு தொழில்முறையாக மாற்றியதால், இணைய உலகம் இரண்டாக பிரிந்து, பெரும் கோபத்தில் உள்ளது.
தற்போது சாகரின் பதிவுகளின் கீழ் உள்ள கமெண்ட் பிரிவில் கோபம், நையாண்டி மற்றும் சந்தேகங்களால் நிரம்பியுள்ளன. “அவர் அவளை நேசிப்பதாக நினைத்தேன், ஆனால் இப்போது இது வெறும் புகழுக்கான உத்தி போல் தோன்றுகிறது,” என்று ஒரு பயனர் எழுதினார். மற்றொருவர், “இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்ட சில நாட்களில் யார் ப்ளூ டிக் வாங்குவார்கள்?” என்று கேள்வியெழுப்பினார். ஒரு குறிப்பாக காட்டமான கருத்து, “இவ்வளவு வலித்தால், உங்கள் கணக்கை தனிப்பட்டதாக மாற்றிவிட்டு துக்கம் அனுசரியுங்கள். ஏன் இந்த டிஜிட்டல் நாடகம்?” என்று குறிப்பிட்டிருந்தது.
பலருக்கு, ஆன்லைனில் துக்கம் அனுசரிப்பது பிரச்சினை அல்ல, ஆனால் அது எப்படி செய்யப்படுகிறது என்பதுதான். சாகரின் பதிவுகளின் அழகு, புதுப்பிப்புகளின் அதிர்வெண் மற்றும் அதிகரித்து வரும் பொது ஈடுபாடு ஆகியவை சங்கடமான கேள்விகளை எழுப்புகின்றன. சிலர் இதை “உணர்ச்சி ரீதியான சுரண்டல்” என்று முத்திரை குத்தியுள்ளனர். மற்றவர்கள் இது “துயர உள்ளடக்க உருவாக்கம்” என்றும், ஒரு துயரச் சம்பவத்தை ஆன்லைன் பிரபலத்திற்கான ஒரு தூண்டுதலாக பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர். விமர்சனங்கள் இருந்தபோதிலும், சாகர் இதுவரை இந்த எதிர்வினைகள் குறித்து பொதுவில் பேசவில்லை. அவரது அமைதி மேலும் ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. சிலருக்கு, அவர் தாங்க முடியாத இழப்பை தனக்குத்தெரிந்த ஒரே வழியில் எதிர்கொள்ளும் ஒரு இளைஞனாகவே இருக்கிறார். ஆனால் மற்றவர்களுக்கு, அவரது துக்கம் திட்டமிட்டதாக தெரிகிறது.
பத்து, அஞ்சு ஃபாலோயர்கள் உயர்வுக்காக இது தேவையா? என சிலர் கரகாட்டக்காரன் வசனம் பாணியிலும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம், துயரத்தை டிஜிட்டல் முறையில் வெளிப்படுத்துவது குறித்த ஒரு பெரிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் வைரல் பாதிப்பு யுகத்தில், துக்கம் எங்கு முடிகிறது, மார்க்கெட்டிங் எங்கு தொடங்குகிறது? தனிப்பட்ட துயரம் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒளிபரப்பப்படும்போது, ஒருவரின் வலியைக் கையாளும் முறையை மதிப்பிடுவது நியாயமா அல்லது அதற்கு வரம்புகள் உண்டா?