ENG vs IND: `ரெட்டைக் கதிரே...' - சதமடித்து இந்தியாவை மீட்ட Classy ராகுல், Beast பண்ட்!
Vikatan June 24, 2025 07:48 AM

இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது இந்தியா.

அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜடேஜா சிறப்பாக பந்துவீசிய போதும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்க, ஒல்லி போப், ஹாரி ப்ரூக்கின் அதிரடியால் 465 ரன்கள் குவித்தது.

வெறும் 6 ரன்கள் முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது. ராகுலும் கில்லும் களத்தில் நின்று கொண்டிருந்தனர்.

கே.எல். ராகுல்

இன்று நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் கில்.

இந்த இக்கட்டான நேரத்தில், ராகுலுடன் கைகோர்த்தார் பண்ட். ஒருமுனையில் க்ளாஸி ஸ்டைலில் ராகுல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆட, மறுமுனையில் தனக்கே உரிய அதிரடி பாணியில் ஒருநாள் போட்டி ஆடினார் பண்ட்.

இங்கிலாந்து பவுலர்கள்களின் பொறுமையை சோதித்துக்கொண்டிருந்த ராகுல் 202 பந்துகளில் சதமடித்தார்.

மறுபக்கம், சோயப் பஷீரின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்ட பண்ட் பவுண்டரிகளாக அடித்து 109 பந்துகளிலேயே 95 ரன்களை எட்டினார்.

ஆனால், அடுத்த 5 ரன்கள் எடுக்க டெஸ்ட் மோடுக்கு சென்ற பண்ட் 130 பந்துகளில் சதமடித்தார்.

அடுத்த ஓவரிலேயே பேக் டு பேக் 4,6,4 என தனது இயல்புநிலைக்குத் திருப்பினார்.

Rishabh Pant

ஒருகட்டத்தில் 92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசென்ற ராகுல் - பண்ட் கூட்டணி, சோயப் பஷீர் வீசிய 71-வது ஓவரில் பண்ட்டின் விக்கெட்டால் முடிவுக்கு வந்தது.

140 பந்துகளில் 118 ரன்களுடன் பண்ட் பெவிலியன் சென்றார். ராகுல் - பண்ட் கூட்டணி மட்டும் 195 ரன்கள் சேர்த்து.

பண்ட் முதல் இன்னிங்ஸிலும் 134 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENG vs IND: `கேட்ச் விட்டதுக்காக உட்கார்ந்து அழ முடியாது!' - பும்ரா பேசியது என்ன?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.