மும்பை: குப்பைத் தொட்டி அருகே மீட்கப்பட்ட மூதாட்டி; விட்டுச் சென்ற பேரன் குறித்து போலீஸ் விசாரணை!
Vikatan June 24, 2025 07:48 AM

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் குப்பை தொட்டி அருகில் வயதான மூதாட்டி ஒருவர் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸார் வந்தபோது 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குப்பை தொட்டி அருகில் குப்பைகளோடு குப்பைகளாக படுத்து இருந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. உடனே போலீஸார் மூதாட்டியை அங்கிருந்து தூக்கி போலீஸ் வேனில் வைத்தனர். அவரை அங்கிருந்து ஜோகேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறி மூதாட்டியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கேயும் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். இறுதியில் போலீஸார் மாலை வரை போராடி டாக்டர்களிடம் பேசி அவரை கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவரது பெயர் யசோதா கெய்க்வாட் என்று தெரிய வந்தது. அவரை அவரது பேரன் கொண்டு வந்து குப்பை தொட்டி அருகில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தார். மூதாட்டிக்கு தோல் புற்று நோய் இருக்கிறது. யசோதா இரண்டு முகவரிகளை கொடுத்துள்ளார். அதில் சென்று விசாரித்தபோது யசோதாவை யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. மூதாட்டி கிடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. ஆனாலும் ஆரே காலனி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு மூதாட்டியின் புகைப்படத்தை மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி அவரது உறவினர்களை கண்டுபிடிக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுமக்களும் மூதாட்டி குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.