“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… இரக்கப்படாத நர்ஸ்… சாலையில் பிள்ளையை பெற்றெடுத்த அவலம்… அரசு மருத்துவமனையின் அலட்சியம்…!!!
SeithiSolai Tamil June 27, 2025 11:48 PM

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள பகதூர்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்த ஒரு சம்பவம், சுகாதாரத் துறையின் அலட்சியத்தையும், மனிதாபிமானத் தட்டுப்பாட்டையும் வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது சம்பவ நாளில் இரவு 3:30 மணியளவில், 22 வயதான கர்ப்பிணி சஜல் பர்தியை அவரது குடும்பத்தினர் அவசரமாக சிகிச்சைக்காக சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள செவிலியர், பிரசவத்திற்கு சிறிது நேரமே உள்ளது, அவரை அசோக்நகருக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி, திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரசவ வலியில் துடித்த அந்தப் பெண்ணை ஆட்டோவில் முங்காவலிக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகமாகி துதேர் கிராமத்திற்கு அருகிலுள்ள சாலையிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் பெரிய பாறைகள் இருந்த நிலையில், மற்ற பெண்கள் நடந்து செல்லும் போது, ஒரு பெண் தனது கைகளில் புதிதாகப் பிறந்த குழந்தையை எடுத்து செல்கின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதையடுத்து, காலை 7 மணியளவில் அந்தப் பெண் மற்றும் குழந்தையை அவரது குடும்பத்தினர் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சுகாதார துறையின் செயல் முறை மீதான கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பி.எம்.ஓ. அமித் பாண்டே, புகார் வந்தால், முழுமையான விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு மருத்துவ சேவைகளின் பின்தங்கிய தன்மையை வெளிப்படையாகக் காட்டுவதோடு, இடைக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தரப்பட வேண்டிய அவசர சிகிச்சை வசதிகள் எவ்வளவு சீரழிந்துள்ளன என்பதையும் உணர்த்துகிறது. மேலும் சாலையே பிரசவ அறையாக மாறிய இச்சம்பவம் மனித குலத்தின் கருணையையும், அரசின் பொறுப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.