ஹைதராபாத் ஆடம்பர வாழ்க்கையை விரும்பிய ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது சலீம், திருட்டை தனது முழுநேர தொழிலாக மாற்றியுள்ள சம்பவம் தற்போது போலீசாரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘சுனில் ஷெட்டி’ என்ற பெயரால் பிரபலமான இவர், ஃபதே தர்வாசா பகுதியில் வசிக்கிறார். தற்போது 26-வது முறையாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு, இதுவரை 150-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது.
சலீமின் குற்றவியல் பயணம், அவரது சிறுவயதில் தான் ஆரம்பமானது. முதலாவது திருட்டு, வீட்டிலிருந்த மளிகைக் கடையில் இருந்து, தனது காதலியை வெளியே அழைத்துச் செல்ல பணம் தேவையாக இருந்ததால் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு பிடிபட்டதும், அவமானத்தில் வீட்டைவிட்டு ஓடி, குற்றத்தை தழுவினார். இவரது 18-வது வயதில் பித்தளைப் பாத்திரங்கள் திருடிய வழக்கில் அவர் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, திருட்டை விடாத சலீம், தனது பணத்தை ஹெலிகாப்டர் பயணங்களில், மும்பை, அஜ்மீர் போன்ற இடங்களில் சுற்றுலா செல்வதில் செலவழித்துள்ளார்.
ஆடம்பர வாழ்வை நோக்கிய அவரது பேராசை, தொடர்ந்து திருட்டில் ஈடுபட வழிவகுத்தது. ஹைதராபாத்தின் மூன்று கமிஷனரேட் எல்லைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, பந்த்லகுடா பகுதியில் இரண்டு வீடுகளில் திருடியதாக கைது செய்யப்பட்ட சலீம், மே மாதத்தில் பிணையில் வெளியே வந்த பிறகு மீண்டும் திருட்டில் ஈடுபட்டார்.
சமீபத்தில் அவர் மீண்டும் போலீசாரால் 26-வது முறையாக கைது செய்யப்பட்டார். இந்த முறை, ரூ.70,000 ரொக்கம் மற்றும் 35 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் மீதான வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.