கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் டிப்டூர் தாலுகாவை சேர்ந்த கதசெட்டிஹள்ளி கிராமத்தில் சேர்ந்த 50 வயது சங்கரமூர்த்தி என்பவர், தனியாக ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். அவரது மனைவி சுமங்கலா, டிப்டூரில் உள்ள கல்பதரு பெண்கள் விடுதியில் சமையல்காரியாக வேலை பார்த்துவந்தார். இவருக்கு கரடலுசந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜு என்ற நபருடன் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர்பை சங்கரமூர்த்தி எதிர்க்க ஆரம்பித்ததையடுத்து, அவர் தங்களுடைய உறவுக்குத் தடையாக இருப்பதாக நினைத்த சுமங்கலா, நாகராஜுவுடன் சேர்ந்து கொலை சதி தீட்டியுள்ளார்.
கடந்த ஜூன் 24ம் தேதி நடந்த இந்த கொலை சம்பவம் மிகவும் கொடூரமானதாக இருந்தது. அதாவது சங்கரமூர்த்தி வீட்டில் இருந்தபோது, சுமங்கலா முதலில் அவரது கண்களில் மிளகாய்த்தூளை தூவி பின்னர், கட்டையால் அவரை தாக்கி, கழுத்தில் கால் வைத்து மிதித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலையைத் தொடர்ந்து, அவருடைய சடலத்தை ஒரு பெரிய பையில் வைத்து, சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள தண்டநிசிவரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணை நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் வீசியுள்ளனர்.
முதலில் இது மாயமானவர் வழக்காக நோனவிநகரே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் சங்கரமூர்த்தியின் வீட்டில் சண்டை நடந்ததற்கான அடையாளங்கள், மிளகாய்த்தூளின் தடயங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் சந்தேகம் அதிகரித்தது. பின்னர், சுமங்கலா மற்றும் அவரது தொலைபேசி அழைப்புப் பதிவுகள் =மீது போலீசார் கவனம் செலுத்தினர். நாகராஜுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை உறுதி செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், சுமங்கலா குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, நாகராஜுவுடன் சேர்ந்து இந்த கொலை சதியை திட்டமிட்டது, தனது கணவன் அவர்களது வாழ்க்கையில் தடையாக இருப்பதாலேயே அவரை கொன்றது என முழுமையாக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் நடந்த இடம் துருவேகேர் தாலுகாவில் உள்ளதாகவும், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கணவனை திட்டமிட்டு கொன்று, சடலத்தை மறைக்க கிணற்றில் வீசிய விதம், இந்த சம்பவத்தின் கொடூரத்தை வெளிக்கொணர்கிறது. தற்போது காவல் துறையினர் இந்த வழக்கை பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.