“தாயின் பிணத்தை யமுனை நதி பாலத்தில் வாகனத்தில் கொண்டு செல்ல தடை விதித்த போலீஸ்”… 1 கி.மீ தூரம் ஸ்ட்ரெச்சரில் சடலத்தை சுமந்து நடந்து சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்.!!!
SeithiSolai Tamil June 30, 2025 02:48 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர்-சாகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள யமுனா பாலத்தில் பழுதுபார்ப்பு பணி நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவது வழக்கமாகும். இதனால் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையில் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.

அதாவது அந்தப் பாதையில் சவ வாகனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், தனது இறந்த தாயின் உடலை ஒரு மகன் ஸ்ட்ரெச்சரில் சுமந்து, ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து பாலத்தை கடக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டெதா கிராமத்தை சேர்ந்த பிண்டா என்பவர், தனது தாயார் சிவதேவியின் கால் எலும்பு முறிந்ததையடுத்து கான்பூரில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். கடந்த சனிக்கிழமை காலை அவரது தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த தாயின் உடலை ஊருக்குத் திரும்ப கொண்டு செல்லும் வழியில் யமுனா பாலம் வந்தபோது, சவ வாகனத்துக்குப் பயண அனுமதி மறுக்கப்பட்டது. உறவினர்கள் வாகனத்துக்காகப் பலமுறை மன்றாடியும் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, பிண்டா, சவ வாகன ஓட்டுநர்களின் உதவியுடன் தாயின் உடலை ஸ்ட்ரெச்சரில் சுமந்து, யமுனா பாலம் முழுவதும் ஒரு கிலோமீட்டர் நடந்து கடக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

இந்தக் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் வடித்தனர். மனிதநேயத்துக்கும் சட்ட கட்டுப்பாடுகளுக்கும் இடையே இவ்வாறான வேதனைக்குரிய நிகழ்வு நிகழ்ந்திருப்பது சமூகத்தை அதிரவைத்துள்ளது. மேலும் அந்நிலையிலும், யமுனா பாலத்தின் பழுதுபார்ப்பு பணியில் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் பொதுமக்கள் இப்படி வலியுறுத்தப்படுவது, நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக நிபுணர்கள் சாடுகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.