டெல்லியில் உள்ள சாஹர்பூர் பகுதியில் 40 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் அவர் தனியாக தன் நான்கு குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் அவரது 10 வயது மகன் நேற்று அந்த பகுதியில் மழை பெய்ததால் மழையில் நனைந்து விளையாட ஆசைப்பட்டுள்ளான். இது பற்றி சிறுவன் தன் தந்தையிடம் கூறிய நிலையில் அவர் மழையில் விளையாடக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் தந்தையின் பேச்சை கேட்காமல் சிறுவன் தொடர்ந்து அடம்பிடித்ததால் ஆத்திரத்தில் அவர் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்மகனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து தந்தையை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.