ஐதராபாத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குகட்பள்ளி, பாலநகர் மற்றும் நகரின் பிற பகுதிகளில் இருக்கும் வெவ்வேறு கள்ளுக்கடைகளில் கள் குடித்தவர்களுக்கு சில மணி நேரத்தில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அவர்கள் நேற்று வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அரசு நடத்தும் நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவன அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
நேற்று இரவு 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலையில் இந்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
சைபராபாத் போலீஸ் அதிகாரி கூறியதாவது:
நேற்று இரவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் கலால் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் கள் அருந்திய கடைகள் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.