இலங்கைக்கு கடத்த முயன்ற, பல லட்சம் ரூபா மதிப்புள்ள 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தலைத்தோப்பு கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி,கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ரோந்து செநடவடிக்கையில் எட்டுப்பட்டனர்.
அதன்போது, உச்சிக்குழி அருகே, தலைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் சிலர் டிராக்டரில் இருந்து பார்சல்களை இறக்கிக் கொண்டிருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் டிராக்டரை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள், பார்சல்களை விட்டுவிட்டு டிராக்டரை விரைவாக ஓட்டிச் சென்றுள்ளனர்.
பார்சல்களை கைப்பற்றிய போலீசார் அதனை பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 80 சுமார் கிலோ வீதம், 10 பார்சல்களில் 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் இருந்துள்ளது. இவைகளின் பெறுமதி, பல லட்சம் ரூபாவாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கடத்தல் தொடர்ப்பாக, ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் தீபக்ராஜா (26), ரவி மகன் உதயகண்ணன் (19), உச்சிப்புளி அருகே இரட்டையூரணியைச் சேர்ந்த செல்வம் மகன் காளீஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாத்திரைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாத்திரை பார்சல்கள் மற்றும் கைதான மூவரையும் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர்களிடம் போலீசார் மேலாதியா விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.