ஒடிசா புவனேசுவரை சேர்ந்த தீபக்குமார் ரவுத், காவல் தலைமையகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி சுபமித்ரா சாஷூ, போக்குவரத்து பிரிவில் காவலராக இருந்தார்.இருவருக்கும் ரூ.10 லட்சம் கடன் விவகாரம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், சம்பவத்தன்று காரில் பயணம் செய்தபோது மீண்டும் சண்டை வெடித்துள்ளது. சட்டென்று வந்த ஆத்திரத்தில் தீபக்குமார், மனைவியை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொன்றார்.
அதன்பின், சுபமித்ராவின் உடலை காரிலேயே வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சுத்தினார். அதன் பிறகு, புவனேசுவரிலிருந்து 750 கி.மீ. தொலைவில் இருந்த கியோஞ்சி பகுதியில் கொண்டு சென்று ரகசியமாக புதைத்தார்.
இதைத் தொடர்ந்து, அருகிலிருந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து செல்ஃபி எடுத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதன் மறுநாள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வழக்கம்போல் பணிக்கு சென்ற தீபக்குமாரின் நடத்தை சந்தேகத்தை கிளப்பியது.
மேலும், சுபமித்ரா காணாமல் போனதால் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அவரது மொபைலில் கணவருடன் ஏற்பட்ட தகராறும், ஆன்மிகப் பயண திட்டமும் பதிவாகியிருந்தது.
இதன் கடுமையான விசாரணையில் மனைவியை கொன்றதை தீபக்குமார் ஒப்புக்கொண்டதாக காவலர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.