மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லத்தூர் மாவட்டத்தில் ஹின்பால்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பஞ்சல். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் காவலர் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இவருடைய தந்தை காய்கறிகள் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் அஜய் தனது தந்தையிடம் காவலர் போட்டித் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழையால் வீட்டில் உள்ள விறகு நனைந்து விட்டதால் சமையல் செய்வதற்காக அஜய்யின் தாய் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். இதை அறிந்த அஜய், "கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு பணம் உள்ளது. ஆனால் தேர்வு கட்டணம் செலுத்த பணம் இல்லையா?" என்று கேட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
தொடர்ந்து மறுநாள் அதிகாலையிலும் அஜய் தேர்வு கட்டணம் செலுத்த பணம் கேட்டு மீண்டும் தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அஜய் மரக்கட்டையால் தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயுரிழந்தார்.
இதைப்பார்த்து கதறி அழுத அஜயின் தாய் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார், அஜய் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.