திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள, ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சின்னா கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அருள்பாண்டி-அம்மு தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே அருள்பாண்டிக்கும் அம்முவின் உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அருள்பாண்டி தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து இனிமேல் இவர் நம்முடன் இங்குதான் வசிப்பார் என்று மனைவி அம்முவிடம் கூறியுள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவரின் இந்தச் செயலால் விரக்தியடைந்த அம்மு வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே வராததால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அம்முவின் தாயார் ஆனந்தி நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.