திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்த அருள்பாண்டி (38) என்பவர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர். அவரும் அதே கிராமத்தை சேர்ந்த அம்மு (28) என்பவரும் காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொடர்பு நான்கு ஆண்டுகளுக்கு முன் ரகசியமாக திருமணமாகும் அளவுக்குப் போயிருக்கிறது என்றும், இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக நடத்தி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, அருள்பாண்டி தனது இரண்டாவது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து, “இனிமேல் இவரும் நம்முடன் இங்கேதான் வசிப்பார்” என்று அம்முவிடம் தெரிவித்துள்ளாராம். இதனால் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மனமுடைந்த அம்மு, வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துள்ளார். நீண்ட நேரமாகியும் கீழே வராததால், குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, மயக்க நிலையில் கிடந்ததை பார்த்தனர். உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அம்மு உயிரிழந்தார்.
மேலும் இது தொடர்பாக, அம்முவின் தாயார் ஆனந்தி, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அருள்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.